பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு -வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
திருவள்ளூர்:
உபரி நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (10.10.2021) பிற்பகல் 2.00 அணி அளவில் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட உள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது,
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளுர் வட்டம், திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும்.
இன்றைய நிலவரப்படி (10.10.2021) நீர் இருப்பு 33.95 அடியாகவும் கொள்ளளவு 2807 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டியில் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 1691 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை (Compendium Rules) வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 10.10.2021 பிற்பகல் 2.00 அணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே, நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.

No comments
Thank you for your comments