நீர்நிலைகளை ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டடம்! - தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் அட்டூழியம்!
வேலூர், ஆக.15-
வேலூர் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் எழுப்பியுள்ளது. பார்க்கிங் வசதியில்லாமல் உள்ளதால் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
வேலூரில் சென்னை-பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டடம் கட்டியுள்ளது. அத்துடன் சிலாப் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டினால், ஆக்கிரமிப்பு செய்தவர்களையும், அதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் வேலூரில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் பாட்டை கால்வாயை ஆக்கிரமித்து அதனை தூர்த்து பிரமாண்டமான கட்டடம் எழுப்பியுள்ளது. அதாவது 7 ஆயிரம் சதுர அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதேபோன்று மழைநீர் செல்லும் பாதையை அடைத்து அதன் மீது கார் ஸ்டாண்ட் அமைத்துள்ளது. பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடமானது ஹரீஷ் ஃபுட் சோன் என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி வேலூரில் பாரம்பரிய கானாறுகளை தூர்த்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடாவடியை அரங்கேற்றி வருகின்றது. இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டுள்ளா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எங்கே பின்பற்றப்படுகின்றன என்பதை வேலூர் பகுதியில் உள்ள பிரமாண்ட கடைகளை பார்த்தாலே தெரியும். நீர்நிலைகள் மற்றும் கானாறு தூர்க்கப்பட்டு இருந்த தடயமே இல்லாமல் உருக்குலைத்து பிராண்டமான கட்டடம் கட்டியுள்ளனர் மாபாதகர்கள். இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டில் பல ஊர்களில் நூற்றாண்டு பழமையான குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் கண்டுபிடிக்கப்பட்டு தூர் வாரப்பட்டு ஆர்வமுள்ள இளைஞர்களால் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் குடிநீர் பஞ்சம் தீர்ந்தால் சரி என்று இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் வேலூர் சத்துவாச்சாரி மண்டலத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் அமைந்துள்ள பிரமாண்ட கட்டடத்தின் அடியில் தூர்க்கப்பட்டு, மறைக்கப்பட்டுள்ள நீர்நிலையைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு துணைபோகும் அரசு அலுவலர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருந்த நிலையிலும் அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் மெத்தனமாக பணியாற்றும் மாநகராட்சி அலுவலர்களை ஏன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது?.
கணிசமான தொகையை இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மாநகராட்சியில் பணியாற்றும் சில அர்ப்ப அதிகாரிகள் வாங்குவதால்தான் இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்கள் முளைக்கிறார்கள், தடம் பதிக்கிறார்கள். ஆண்டவன் சொத்து ஆளுக்கொரு கொத்து என்று சொல்வதுண்டு. அதுபோன்று ஊர் பொதுமக்கள் பயன்படுத்த ஒதுக்கப்பட்ட நீர்நிலையை தூர்த்து கட்டடம் கட்ட அனுமதி கொடுத்த கயவர்களை கண்டுபிடித்து அவர்கள் முகத்திரையை கிழித்தெறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதற்கு வேலூர் மாநகரின் வரைபடத்தை அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை பார்த்தால் உண்¬ம் நன்கு விளங்கும்.
இதுபோன்ற தடயங்களை மறைத்து கட்டடம் கட்ட மாநகராட்சி அலுவலர்கள் எப்படி அனுமதி அளித்தனர். நகரமைப்பு அலுவலர் கண்ணன் எப்படி இந்த கட்டடத்துக்கு அனுமதி கொடுத்தார் என்பதே புரியாத புதிராக உள்ளது. அதுதான் முறைகேடாக நடந்தது என்றால், அதற்கு பக்கத்தில் கானாறு செல்லும் வாய்க்காலை மண்ணை நிரப்பி தூர்த்து ஹைட்ராலிக் கார் நிறுத்துமிடம் அமைத்துள்ளனர். இதில் அடுக்கடுக்காக 30 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி கொண்ட கார் நிறுத்துமிடம் அமைக்க முறையாக சென்னையில் அனுமதி பெற வேண்டும். அங்கும் அனுமதி பெறாமல் கானாற்றை தூர்த்து இந்த கார் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை
தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மீது சுமத்திக் கொண்டே போகலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள், நீர் நிலை பாதுகாவலர்கள். அத்துடன் இந்த கட்டடம் அவசர கதியில் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலாப்புகளை கொண்டு வந்து அடுக்கி கொண்டே போய் கட்டடத்தை நிறைவு செய்துள்ளனர். இதுபோன்ற பிரமாண்ட கட்டடங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டிக் கொள்கிறது.
வருவாய்த் துறையின் நகரமைப்பு வரைபடத்தில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் கட்டடம் அமைந்துள்ள இடத்துக்கு அடியில் நீர் நிலை பகுதி உள்ளது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. 16 சென்ட்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதை வருவாய்த்துறையினராவது கண்டுபிடித்து பொதுமக்கள் வசதிக்காக மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி அலுவலர்களை போன்று வருவாய்த்துறையினரும் விலை போய் விடக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தி ஹரிஷ் ஃபுட் ஸோன் என்ற நிறுவனத்தை தி சென்னை சில்க்ஸ் நிறுவனமானது தரைத்தளத்தில் அமைத்துள்ளது. இதனால் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம் பல்பொருள் அங்காடிக்காக ஒதுக்கப்பட்டு செயல்படத் தொடங்கிவிட்டது. இதனால் இந்த தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு வரும் வாகனங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்று எதுவாக இருந்தாலும் சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் தினமும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடைபாதையை கூட விட்டு வைக்கவில்லை வஞ்சகர்கள். எங்கு பார்த்தாலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலை மாற வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது தெள்ளத் தெளிவாக புரிய ஆரம்பித்துள்ளது. வேலூர் வருவாய் வட்டாட்சியரும் இதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இவரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தாரிடம் பல லட்சங்களை கையூட்டாக பெற்றுக் கொண்டுள்ளது வேலூர் மாநகராட்சி நிர்வாகம் என்கின்றனர் சிலர்.... இதனால் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. பொதுமக்கள் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் செய்யும் தவறுகளை சுட்டிக் காண்பித்து புகார் கொடுத்தாலும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. கண்டும் காணாதது போன்று அமைதி காத்து கொள்கிறது வேலூர் மாநகராட்சி நிர்வாகம்.
கார் பார்க்கிங் வசதி இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய மல்டி லெவல் நிறுவனம் நடத்த எப்படி அனுமதி கொடுத்தது அரசு. நிலைமை இப்படி மோசமாக சென்று கொண்டுள்ளது. நீர்நிலைகளை காக்க பல இடங்களில் பல்வேறு நடவடிக்கைகளை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எடுத்து வருகின்றனர். தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் ÔபÕ வைட்டமின் வாங்கிக் கொண்டு இப்படி முறைகேடாக ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தன் விருப்பப்படி கட்டடம் கட்டிக் கொள்ளவும், நீர்நிலைகளை தூர்த்து கட்டடம் கட்டிக் கொள்ள தடையில்லா சான்று மற்றும் அனுமதி வழங்கியவர்கள் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பதே வேலூர் மாநகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இனி மாநகராட்சி விழித்துகொள்ளுமா அல்லது விலைபோகுமா...
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு கட்டடத்தை சுற்றியும், கட்டடத்தின் அடியில் நீர் நிலைகள் இருப்பது உண்மையா? என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பாட்டையை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நீர்நிலைகளை மீட்பாரா? அல்லது இவரும் கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா?. எங்களுக்கு தி சென்னை சில்க்ஸ் போன்ற துணிக்கடை நிறுவனம் தேவையில்லை. நீராதாரம்தான் முக்கியம் என்ற பொதுமக்கள் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையையும், சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்ற கட்டட ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கும் நடவடிக்கையையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அரசு விதித்த அபராத தொகையும்... செலுத்தாமல் ஏமாற்றும் சில்க்ஸ் நிறுவனமும்... நமது புலன் விசாரணை தொடரும்..!✍




No comments
Thank you for your comments