Breaking News

6426 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்க ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் 6626 கிராம பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் முதலில் 19 மாவட்டங்களில் 6426 கிராமங்களில் அமல் செய்யப்படும். மீதமுள்ள மாவட்டங்களில் வழக்கு முடிந்ததும் அமல் செய்யப்படும் என தமிழக அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது.

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தங்கள் இன்று (20.10.2021) கையெழுத்தாயின. 

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (TANFINET) பாரத்நெட் திட்டத்தை அமல் செய்யும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டான்ஃபிநெட் (TANFINET) நிறுவனத்துக்கும்   தமிழ்நாட்டில் சி பிரிவாக தொகுக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ள 3326 கிராமங்களில் கண்ணாடி இழை வலையமைப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ள எல் அண்ட் டி நிறுவனத்துக்கும் D யாக தொகுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் உள்ள 3103 கிராமங்களில் அமல்படுத்த உள்ள  ITI நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 

மூன்றாமவர் முகமையான பெசில் (BECIL)  நிறுவனம் தணிக்கை பணியினைச் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது..

"பாரத்நெட்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராம பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். 

இத்திட்டத்தினை “தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)” ரூ.1815.32 கோடி செலவில் செயல்படுத்தும். 

இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும் என இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், தெரிவித்தார்.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக மாவட்டங்கள்  நான்கு தொகுப்புகளாக (A, B, C & D) பிரிக்கப்பட்டுள்ளன்.

தொகுப்புக்கு ஒருவர் என நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், தணிக்கை மற்றும் ஆய்வு செய்ய மூன்றாமவர் முகமையும் (Third Party Agency -TPA) தெரிவு செய்யப்பட்டது. 

தற்சமயம், தொகுப்பு C & D-இல் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் இன்று  கையெழுத்திடப்பட்டது.

தொகுப்பு C-இன் கீழ், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 3326 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

தொகுப்பு D-இன் கீழ், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 3103 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, இக்கிராமங்கள் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு 1 Gbps அளவிலான அலைக்கற்றை சேவை வழங்கப்படும்.

நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு வழக்குகள் முடிவுக்கு வந்த பின்னர், தொகுப்பு A மற்றும் தொகுப்பு B-இல் மாவட்டக்கிராமங்களுக்கு அலைக்கற்றை இணைப்பும் உரிய அலைக்கற்றை இணைப்பும் அளிக்கப்படும். அப்பொழுது தமிழக்தில் உள்ள அனைத்து 12525 கிராமப்பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பாரத்நெட் திட்டத்தின் மூலம், அனைத்து கிராமப்புறங்களுக்கும், மலிவான மற்றும் தரமான “டிஜிட்டல்”(Digital) சேவைகள், மின் கல்வி (e-Education), தொலை மருத்துவம் (Tele Medicine), இணையதள இணைப்பின் மூலம் மூன்று விதமான சேவைகள் (Triple Play) ஆகிய சேவைகளை  வழங்க முடியும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினை பெற முடியும். இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இத்திட்டம் வழி வகுக்கும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலர் நீரஜ் மித்தல், தமிழ் நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.கே. கமல் கிஷோர் திருமதி. ஜி. கலைவாணி, தலைமை பொது மேலாளர், பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் நிறுவனம் (BBNL), மு. சந்திரசேகர், முதன்மை பொது மேலாளர், பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் நிறுவனம் (BBNL),  திட்டத்தை செயல்படுத்த உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments