பக்தர்களிடம் பணம் கேட்டால் நடவடிக்கை பாயும்... இந்துசமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுப்பு...
சென்னை:
கோயில்களில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் பணம் கேட்கப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என இந்துசமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்த விரும்புவோரிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அண்மையில் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், மொட்டை அடிப்பதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகமே முடிதிருத்துநர்களுக்கு செலுத்தும் எனவும் கூறியிருந்தார்.
ஆனாலும் தமிழகத்தின் பல கோயில்களில் முடி காணிக்கை செலுத்த வருவபர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.
இது குறித்த தகவல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கவனத்திற்கும் சென்றிருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் விடுத்துள்ள அறிவிப்பில்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முடி காணிக்கை செலுத்த வரும் நபர் ஒருவருக்கு ரூ.30 கணக்கிட்டும், அது நீங்கலாக ரூ.5,000 ஊக்கத்தொகையாக முடிதிருத்துநர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
முடிகாணிக்கை கட்டச்சீட்டு நடைமுறையில் உள்ள கோயில்களில் கட்டணத்தொகை பங்குத்தொகை பெற்று கோயில் மூலம் முடி இறக்கும் பணியாளர்களுக்கு முடி காணிக்கை செலுத்தும் நபர் ஒருவருக்கு ரூ.30 கணக்கீடு செய்து கோயில் நிர்வாகம் மூலம் சம்பந்தபட்ட பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த ரூ.30 கட்டணம் நீங்கலாக மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடங்குமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது எனக் குமரகுருபரன் கூறியிருக்கிறார்.
மேலும், முடி இறக்க வருபவர்களுக்கு கட்டணமில்லா முடி இறக்கும் சீட்டு என்றும் மேலும் முடி இறக்குவதற்கு தேவையான பிளேடுகளை கோயில் மூலமே வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக முடி இறக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் முடி இறக்க வருபவர்களிடம் எந்தக் கட்டணமும் கேட்கக்கூடாது என்றும் அவ்வாறு காசு கேட்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது காவல்துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக அதனை புறந்தள்ளும் வகையில் முடி இறக்குவோரிடம் காசு கேட்கப்படுவதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து இந்த எச்சரிக்கை அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
No comments
Thank you for your comments