குடியுரிமை சட்டத்திருத்ததை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
சென்னை:
மத்திய அரசு 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேற்றம்.
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
இந்தியாவின் சுதந்திரம் என்பது, அனைவரும் சேர்ந்து போராடியதால் கிடைத்தது. இமயம் முதல் குமரி வரையிலான ஒற்றுமையால் அடைந்த வெற்றியாகும். இத்தகைய உன்னதமான நல்லிணக்க மரபிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், இந்திய மக்களிடையே பேதத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது; இரத்து செய்யப்பட வேண்டியது என நாம் கருதுகிறோம். மேலும், இச்சட்டத்தின் நீட்சியாக தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register) தயாரிக்கும் பணியினையும், அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) தயாரிப்பதையும் ஒன்றிய அரசு முழுவதுமாகக் கைவிடவேண்டும் எனவும் நாம் கருதுகிறோம்.
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில், இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் இந்திய மக்களிடையே மத. இனரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசை இம்மாமன்றம் வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தினை நிறைவேற்றித் தர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தத் தீர்மானத்தைத் தற்போது அவையில் முன்மொழிகிறேன் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
முதலமைச்சர் முன் மொழிந்த தீர்மானம்:
“ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்தியச் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது. மக்களாட்சித் தத்துவத்தின்படி ஒரு நாட்டின் நிருவாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.”
எனும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன் என முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது.
இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தில் கூறியிருக்கிறார்
No comments
Thank you for your comments