செல்வமகள் சேமிப்புத் திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பயன்பெற இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டொண்டிற்குக் குறைந்தபட்சமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் “செல்வமகள் சேமிப்புத் திட்டம்“ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் (அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள்) இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றிடலாம். இக்கணக்கைத் தொடங்குவதற்குக் குறைந்தபட்சமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும், மேலும் ஆண்டொண்டிற்குக் குறைந்தபட்சமாக ரூபாய் 250 (ரூபாய் இருநூற்றி ஐம்பது மட்டும்) அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 (ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் மட்டும்) வைப்புத் தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையைப் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காகப் பெற்றுக்கொள்ளலாம்.
சேமிப்பின் முதிர்வுத் தொகையைப் பெண் குழந்தையின் திருமணத்தின்போது அல்லது 21 வயது நிறைவுபெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு.
இவ்வாறு, தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


No comments
Thank you for your comments