அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகளைத் திரும்பப் பெற ஆணை
சென்னை
கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27-9-2021) ஆணை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு
கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதிலுரையில்
“கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை - சேலம் 8 வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கடந்த 13-9-2021 அன்று காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில்,
“நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ எனவும் அறிவித்திருந்தார்கள்.
அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27-9-2021) ஆணையிட்டுள்ளார்கள்.
No comments
Thank you for your comments