அதிமுக மீது அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு... அனல் மின் நிலையத்திலும் 71,000 டன் நிலக்கரி மாயம்..
சென்னை:
வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மாயமானதாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயமாகியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளதார்.
தமிழக சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 71,857 டன் நிலக்கரியை காணவில்லை. அங்கேயும் பதிவேட்டில் இருக்கிறது. ஆனால் இருப்பில் இல்லை. எங்கே தவறு ஏற்பட்டது?, இந்த தவறு எத்தனை ஆண்டுகளாக நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான ஆய்வு அறிக்கை வந்தவுடன் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 485 டன் நிலக்கரி காணவில்லை என்பதை கண்டறிந்தோம். அதாவது, பதிவேட்டில் உள்ளது, இருப்பில் இல்லை.
நாங்கள் புகார் கூறிய மாலையே நிருபர்களை சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இது தொடர்பாக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப்பட்டதாக கூறினார்.
எந்த குழு அமைக்கப்பட்டது? அப்படி குழு அமைக்கப்பட்டாலும் அதன் விசாரணை அறிக்கை எங்கே? என்று தெரியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்கொள்முதல் செய்வதால்தான் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. மின் துறை என்பது சேவை துறைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சேவை என்பதற்காக இவ்வளவு அதிகமான விலையில் மின் கொள்முதல் செய்வதா? வருங்காலங்களில் மின் துறையில் தேவையில்லாத செலவினங்களை குறைக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்கில் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கடந்த மாதம் ஆய்வு செய்தனர். அப்போது வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி விட்டது என்பது தெரியவந்தது. பதிவேட்டில் உள்ளதற்கும், களத்தில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ' நிலக்கரி மாயமானது குறித்து முதல்கட்ட விசாரணை அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இறுதிகட்ட ஆய்வுக்கு பிறகே முழுமையாக தகவல் வெளியிடப்படும். கடந்த ஆட்சியில் இது தவறு என தெரிந்தும் யாரை காப்பாற்ற முயற்சி நடந்துள்ளது? கடந்த ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்' என்று கூறி இருந்தார்.
செந்தில்பாலாஜியின் கருத்துக்கு விளக்கம் அளித்திருந்த முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, 'அதிமுக அரசு ஏற்கனவே எடுத்த கணக்கைத்தான் தாங்கள் கண்டுபிடித்ததைப் போல அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது. அதிமுக அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே செந்தில்பாலாஜி இக்குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments