Breaking News

ரத்து செய்யப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ் வழக்குகள் மாநில அரசுகளுக்கு நோட்டஸ்-உச்ச நீதிமன்றம்

சென்னை:

கடந்த 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும் ஐடி சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து 4 வாரங்களில் விளக்கம் அளிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



இந்தியாவின் ஐடி சட்டம் பிரிவு 66A சட்டப்பிரிவின்படி ஆபத்தானது அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்களைக் கைது செய்யலாம். ஆனால், இந்தச் சட்டத்தைக் கடந்த 2015ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இருந்தாலும்கூட ரத்து செய்யப்பட்ட இந்த சட்டத்தை வைத்துக் கொண்டு 11 மாநிலங்கள் மொத்தம் 745 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திறத்திலும் வழக்கு தொடரப்பட்டது.  ரத்து செய்யப்பட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பினர்.

இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உள் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. மேலும், கடந்த ஜூலை 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது பதில் மனுவையும் தாக்கல் செய்திருந்தது. அதில், "இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2015இல் அளித்த தீர்பை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் ஏற்கனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 21 மாநிலங்கள் இந்த தீர்பை நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஆனால், சில மாநிலங்களில் நீக்கப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி போலீசரும் சட்ட ஒழுங்கும் மாநில பிரிவின் கீழ் தான் வருகிறது. எனவே, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் அறிவுறுத்தியுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "மத்திய அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டதைப் போல காவல்துறை என்பது மாநில அரசுகளுக்கு உட்பட்டது. எனவே இதில் அனைத்து மாநில அரசுகளையும் சேர்ப்பதுதான் சரியாக இருக்கும். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், உயர் நீதிமன்றங்களும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

No comments

Thank you for your comments