Breaking News

பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம்: 

சேலம் அருகே தம்மம்பட்டியில் 1,500 கிலோ குட்கா போதை பொருளை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததால் கைது செய்யப்பட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தம்மம்பட்டி நகர வர்த்தகர் அணி பொருளாளர் பிரகாஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.



தமிழகத்தில் 2 மாதங்களில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டவிரோத குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய அரசு தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் சேலம் தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே போலீசார் பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர். பேருந்து நிலையம் எதிரே உள்ள கந்தசாமி மகன் அருள் என்பவரது கடையில் இருந்து 10 பாக்கெட்டுகள் குட்கா, பான்பராக் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அருளுக்கு இவற்றை சப்ளை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையை தொடர்ந்து சேலம் போலீசார் திடீரென இரவு 10 மணிக்கு மேல் தம்மம்பட்டி நடுவீதியில் குடியிருக்கும் பாஜக நகர வர்த்தக அணியின் பொருளாளர் பதவியில் உள்ள குல்லி என்ற பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குல்லி பிரகாஷின் கடை, குடோன்களில் அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் கிடைக்கவில்லை.

பின்னர் பிரகாஷிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது தமக்கு சொந்தமான இடங்களில் குட்கா உள்ளிட்ட பொருட்களை வைத்தால் சிக்கிக் கொள்வோம் என்பதால் வேறு ஒருவரது விவசாய தோட்டத்தில் அவற்றை பதுக்கி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். பிரகாஷ். சேலம் அருகே உடையார்பாளையம் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் தொடக்கப்பள்ளி உள்ளது. அதற்கு எதிரே உள்ள கோபால் நாயக்கர் என்பவரது தோட்டத்தில்தான் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் கூறினார்.

இதனையடுத்து, கோபால் நாயக்கர் தோட்டத்தில் போலீஸ் படை தேடுதல் வேட்டை நடத்தியது. இதில்தான் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பிடிபட்டன. போலீசார் மலைத்து போகும் அளவுக்கு ஒன்றரை டன் அதாவது 1,500 கிலோ போதைப் பொருட்களை பாஜக பிரமுகர் பிரகாஷ் பதுக்கி வைத்திருந்தார். இவற்றின் மதிப்பு ரூ50 லட்சம் இருக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

பிரகாஷின் குட்கா பொருள் விற்பனை ஸ்டைல் என்பது போலீசிடம் எந்த சூழலிலும் சிக்கக் கூடாது என்பதுதான். அதாவது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் பிரகாஷின் இந்த வியாபாரம் அதிகாலை 3 மணி வரை நடக்கும். இந்த வியாபாரம் உப்பாத்துக்காடு அருகே உள்ள சுடுகாட்டில்தான் நடக்குமாம். தமக்கு முன் பின் அறிமுகம் இல்லாத நபர் வந்தால் ஒருபோதும் குட்கா பொருட்களை பிரகாஷ் விற்பனை செய்யவே மாட்டாராம். இதையெல்லாம் கேட்டு கிறுகிறுத்துப் போன போலீசார் பிரகாஷை தூக்கி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்தான் பிரகாஷ் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குப் பின்னர் தற்போது அவர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தமிழக பாஜக வர்த்தக அணி நிர்வாகி ஒருவர் போதைப் பொருள் பதுக்கல் வழக்கில் சிக்கி குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  இனி ஓராண்டுக்கு அவரால் ஜாமீனில் கூட வரமுடியாது.  

No comments

Thank you for your comments