இதற்காகதான் சிஏஏ சட்டம் தேவை- சூழ்நிலையை சாதகமாக்கும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் கடினமான காலங்களை அனுபவித்து வருகிறார்கள், இது இந்தியாவில் சிஏஏ சட்டத்தின் அவசியத்தை உணர்த்துகிறது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றிபெற்றதில் இருந்து அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக பெண்கள் பலர் கூட்டம் கூட்டமாக நாட்டை காலி செய்து வெளியேறி வருகிறார்கள். தாலிபான்களுக்கு கீழ் பாதுகாப்பு இருக்காது என்பதாலும், 2001க்கு முன் தாலிபான் ஆட்சியில் கொடுமைகளை அனுபவித்தது போல அனுபவிக்க நேரிடலாம் என்பதாலும் மக்கள் பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்கள் குடியேற விரும்பும் நாடுகளாக உள்ளன. முக்கியமாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் மத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள் இந்தியாவிற்கு குடியேறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக மீட்பு பணிகளை இந்தியா துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அங்கு இருக்கும் இந்தியர்களையும், மத சிறுபான்மையினரையும், மற்ற சில ஆப்கானிஸ்தான் மக்களையும் இந்தியா வேகமாக மீட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதை சிஏஏ சட்டத்தோடு தொடர்புபடுத்தி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
அண்டை நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றமும் அங்கு இந்துக்கள், சீக்கியர்கள் சந்தித்து வரும் கொடுமையான காலங்களும், இந்தியாவிற்கு ஏன் குடியுரிமை திருத்த சட்டம் முக்கியம் என்பதை உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் கடினமான காலங்களை அனுபவித்து வருகிறார்கள். இது இந்தியாவில் சிஏஏ சட்டத்திற்கான அவசியத்தை உணர்த்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிஏஏ சட்டத்தையும், ஆப்கானிஸ்தானில் இருந்து மத சிறுபான்மையினர் வெளியேறுவதையும் தொடர்புபடுத்தி அவர் பேசி இருப்பது விவாதப்பொருளாகி உள்ளது. இதற்கு பலரும் சரி என்று ரீடிவிட் செய்து வருகிறார்கள்...
மத்திய பாஜக அரசு மூலம் எதிர்ப்புகளுக்கு இடையில் இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பருக்கு முன் இந்தியாவிற்குள் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய மதச்சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் சட்டம் ஆகும்.
இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கப்படாததால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் இடையே இந்த சட்டம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது. சிஏஏ சட்டத்தோடு என்ஆர்சி சேர்ந்து நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக செல்லலாம் என்ற அச்சம் நிலவியதால் டெல்லியில் இந்த சட்டத்திற்கு எதிராக பலர் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள், மீட்பு பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.
இந்திய வெளியுறைவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இந்தியாவின் மீட்பு பணிகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதில் இந்திய வெளியுறவுத்துறை தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை மீட்பதே எங்களின் முதல் குறிக்கோள்.
முக்கியமாக ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் சீக்கியர்கள், இந்துக்களை மீட்க முக்கியத்துவம் தரப்படும். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நான் கவனமாக இருக்கிறோம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களுடன் பேசி வருகிறோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.
Recent developments in our volatile neighbourhood & the way Sikhs & Hindus are going through a harrowing time are precisely why it was necessary to enact the Citizenship Amendment Act.#CAA#Sikhs— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 22, 2021
Hardeep Singh Puri justifies CAA with Afghanistan-Taliban crisis. Very right @HardeepSPuri https://t.co/bTawY1YZ1d
— Mohandas Pai (@TVMohandasPai) August 23, 2021

No comments
Thank you for your comments