கொரோனாவால் சாம்பார் வெள்ளரியை கீழே கொட்டும் அவல நிலையில் விவசாயிகள் ...
🔏 செய்தி : ஆர்.காமராஜ் விருத்தாசலம்
கடலூர், ஆக.22-
கொரோனா பரவல் காரணமாக சாம்பார் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் கீழே கொட்டுகின்றனர் விவசாயிகள்.
விருத்தாசலம் அடுத்த வேப்பூர் தாலுக்கா அசகளத்தூர் சேதுவராயன்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாம்பார் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர்.
இந்த சாம்பார் வெள்ளரிக்காய் கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநில மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
60 நாள்களில் அறுவடை செய்யப்படும் இந்த சாம்பார் வெள்ளரிக்காயை வெளிமாநில வியாபாரிகள் வேப்பூர் சுற்றுவட்டார பகுதியில் நேரடியாக வந்து விவசாயிகளிடம் ஏற்மதி செய்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஏற்றுமதி செய்யவரவில்லை.
இதனால் கொடிகளில் காய்த்த சாம்பார் வெள்ளரிக்காய்களைப் பறித்து விளைநிலத்திலே கீழே போடும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏக்கருக்கு மூவாயிரம் கிலோ வரை சாகுபடி செய்யப்படும் இந்த சாம்பார் வெள்ளரிக்காயை தற்போது காய்களைப் பறிக்காவிட்டால் வெள்ளரி கொடி அழிந்து நிலம் வீணாகிவிடும் என்ற காரணத்தால் விவசாயிகள் வேறு வழியில்லாமல் காய்களை பறித்து விளைநிலத்தில் கொட்டி வருகின்றனர் .
கடந்த காலத்தில் ஒரு கிலோ ரூபாய் 50 வரை விற்பனையான சாம்பார் வெள்ளரி தற்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது.
இதனை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவிட்டதாகவும் , உரிய காலத்தில் அறுவை செய்து ஏற்றுமதியாகியிருந்தால் ஏக்கருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கிடைத்திருக்கும் எனவும் தெரிவித்தனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments
Thank you for your comments