Breaking News

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நிரூபித்துவிட்ட எதிர்க்கட்சியினர் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை காண வீடியோவை கிளிக் செய்யவும்👆

சென்னை :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் குறுக்கீடு இல்லை, நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, எதிர்க்கட்சியினர் இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தழிழக சட்டமன்றத்தில் புதனன்று (18-8-2021) கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசிய உரையில், 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, எதிர்க்கட்சியினர் இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல.

நள்ளிரவிலே நடைபெற்ற அந்தக் கொள்ளைச் சம்பவத்திலே, அடுத்தடுத்து நடைபெற்றிருக்கக்கூடிய மரணங்கள், விபத்து மரணங்கள் போன்றவை அப்போதே மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் அந்தக் கொள்ளை, கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின்முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று ஏற்கெனவே தேர்தல் நேரத்திலே நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.  அதனடிப்படையிலே, முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அரசியல் நோக்கத்தோடு அல்ல; முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதியைப் பெற்று, நீதிமன்றத்தினுடைய அனுமதியோடுதான் இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்குகிற எண்ணமோ நிச்சயமாக இல்லை. 

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதிலே கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில், நிச்சயமாக உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேறு யாரும் அச்சப்பட வேண்டிய பயமோ, அவசியமோ இல்லை. 

இந்த அரசு நிச்சயமாகச் சட்டத்தின் ஆட்சியை நடத்தும். ஆகவே, கொடநாடு வழக்கிலே, நீதிமன்றத்தின் அனுமதியோடு நடக்கும் விசாரணைக்கு, ‘அரசியல் நோக்கத்தோடு’ என்று ஒரு களங்கத்தைச் சுமத்தியிருக்கிறார்கள்.

அது அப்படியல்ல என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான், நான் இந்த விளக்கத்தை இந்த அவையிலே நான் எடுத்து வைத்திருக்கிறேன்.  நான் தொடக்கத்திலேயே சொன்னேன். அரசியல் நோக்கத்தோடு, பழிவாங்குகிற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. 

‘தேர்தல் நேரத்திலே சொன்ன உறுதிமொழிகள் என்னவாயிற்று? எதையும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.  அதிலே ஒன்றுதான் இது.  இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.

எனவே, நீதிமன்றத்தினுடைய ஆணைப்படி, நீதிமன்றத்தினுடைய உத்தரவின் அடிப்படையில்தான், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, தனிப்பட்ட முறையில், அரசியல் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல உறுப்பினர் ஜி.கே. மணி அவர்களுக்கும் இதை வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டிட விரும்புகிறேன்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன், இது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறார். மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம் இருக்கும்.  எனவே, யாரும் பயப்பட வேண்டியதில்லை; அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று பேசினார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை காண வீடியோவை கிளிக் செய்யவும்👇


 

No comments

Thank you for your comments