கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் - சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை :
கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட மத்திய அரசிடம் அழுத்தம் தந்து நிறைவேற்றுவோம் என்று சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று (18-8-2021) உறுதி அளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்வைத்த கோரிக்கைக்கு முதலமைச்சர் ஆற்றிய விளக்க உரை விவரம்:
பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினர் இங்கே பேசுகிறபோது, மெட்ரோ இரயில் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் காட்டி, ‘கோவைக்கு மத்திய அரசோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறீர்களே, அது வேதனை அளிக்கிறது என்ற பொருள்பட இங்கே ஒரு கருத்தைச் சொன்னார்கள்.
நம்முடைய நிதி அமைச்சர் அவர்களும் அதற்கு விளக்கம் தந்திருக்கிறார்கள்.
மெட்ரோ இரயில் திட்டத்தைப் பொறுத்தவரையில், ஒன்றிய அரசினுடைய உதவியோடு, ஒன்றிய அரசின் நிதியுதவியைப் பெற்றுத்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றிட முடியும். அப்படித்தான் இதுவரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றைக்குக்கூட ஒன்றிய அரசிடமிருந்து எங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. இன்றைக்கு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.
நான் ஏற்கெனவே டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்தபோது, இதுகுறித்து நான் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்; அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறேன். அந்த அழுத்தத்தின் அடிப்படையில்தான், நேற்றைக்கு அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது.
இங்கே உறுப்பினர் சொன்னதுபோல, கோவைக்கும் நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம். கவலைப்பட வேண்டாம். கோவைக்கு மட்டுமல்ல; மதுரைக்கும் அறிவித்திருக்கிறோம். ஆகையால், எங்கெங்கு அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டுமோ, அந்தந்த முறையிலே நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் பேசுகிறபோது, கோவையில் இருக்கக்கூடிய மத்திய சிறையை மாற்றி, அங்கு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்தார்கள். செம்மொழி மாநாட்டை திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்தியபோதே, ஏற்கெனவே கலைஞர் அவர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 10 ஆண்டு காலம் அவர்கள் அதைப்பற்றி யோசிக்கவில்லை; சிந்திக்கவில்லை. இந்த ஆட்சியில் எனவே, உங்களுடைய கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
No comments
Thank you for your comments