அரசு திவாலாக உள்ளதால் வரி உயர்வு அவசியம்.... நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை:
- அரசாங்கம் திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் 110 விதியின் கீழ் 400-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். அவைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா...?
- அரசின் திட்டங்களையும், தேர்தல் அறிக்கைகளையும் செயல்படுத்துவதில் நாங்கள் பின்வாங்க போவதில்லை, அனைத்து வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது நிதி அமைச்சர் பிடிஆர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். வருவாய் இல்லாமல் அரசாங்கம் திவாலாக உள்ளது. எனவே வரியை உயர்த்தியே ஆக வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு பொருளாதாரம் பற்றி தெரியாது. வெள்ளை அறிக்கை சம்பந்தமாக வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு இருக்கிறார். அவருடைய உளறல்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோர்ட்டில் ஆஜராகி சொல்வது போல, வருவாய் பற்றாக்குறை இருந்தது என்று ஒப்புக்கொண்டு விட்டார்.
ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு பார்வை திட்டம் - 2023 நிறைவேறவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பொறுப்பற்ற ஆட்சி நடைபெற்றுள்ளது.
அரசின் நிதி நிலையை மாற்றுவதற்கு, மக்களிடம் கருத்து கேட்டு, நிபுணர்களிடம் விவாதித்து பின்னர் ஒரு திட்டத்தை தீட்டி செயல்படுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாளை (13.08.2021) தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு கற்பனை கருத்துக்கள் வெளியாகிறது. அது போன்ற யூகங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments