9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையம்
சென்னை:
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகின்றன.
தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.
இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தயாரானது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
மாவட்டம் வாரியாக தேர்தல் ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் கமிஷனர் பழனிகுமார் செய்து வருகிறார்.
9 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி போன்றவை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான தேர்தல் தேதி செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலகின்றன. 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும் என்று இரு கட்சிகளும் வரிந்துகட்டி கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். அதனுடைய கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
உள்ளாட்சி தேர்தலுக்காகதான், தமிழ்நாடு 2021 - 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவாத கூட்டத்தொடர், மானிய கோரிக்கை ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை 23 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ஒருசில துறைகள் மாற்றம் செய்யப்பட்டு 9 நாட்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, செப்டம்பர் 13-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.
No comments
Thank you for your comments