அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 53 இடங்களில் சோதனை
கோவை:
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் புகார்
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவிகிதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார். மாநகரில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் ரகுநாத்.
பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இது தொடர்பாக டி.ஜி.பி உட்பட காவல் துறை உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி இருப்பதாகவும் ரகுநாத் தெரிவித்தார்.
![]() |
கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு. |
இதே போல கோவை, வடக்கு கணபதிபுரம் வி.ஜி. ராம் நகர் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவரும், காவல் ஆணையரைச் சந்தித்து எஸ்.பி.வேலுமணி மீதும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்துள்ளார்.
காவல் ஆணையரிடம் திருவேங்கடம் அளித்த புகாரில்," எனக்கு 2002ஆம் ஆண்டு முதல் எஸ்.பி.வேலுமணி பழக்கமானவர். முன் தொகையாக கமிஷன் கொடுத்தால் எனக்கு சிவில் ஒப்பந்த பணிகளை தருவதாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எஸ்.பி.வேலுமணி சொன்னதன் பேரில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் ரோஜா இல்லத்திற்கு நேரில் சென்று ஒரு கோடி ரூபாய் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 தேதியில் 20 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொடுத்தேன்.
பின்னர் அவர் சொன்னபடி அவருடைய பிஏ பார்த்திபனிடம் ஐந்து லட்ச ரூபாயையும் கொடுத்தேன். ஐந்து லட்சம் பணம் கொடுத்த விபரத்தை எஸ்.பி.வேலுமணியிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொன்னபடி எனக்கு சிவில் ஒர்க் காண்ட்ராக்ட் ஒப்பந்த பணிகளை கொடுக்கவில்லை, வேறு ஒப்பந்ததாரர்களுக்கு அப்பணிகளை கொடுத்துவிட்டார்.
கொலை மிரட்டல் விடுப்பு
பணியும் ஒதுக்காமல், வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறீர்களே என்று நான் சொன்னதற்கு நாங்கள் பணத்தை கொடுக்கிறோம், நீங்கள் பொறுத்திருங்கள் எங்களை அவசரப்படுத்தினீர்கள் என்றால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
இப்படியே 2016 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டது. தற்போது ஆட்சியும் மாறிவிட்டதால் பணத்தை திரும்பக்கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.
![]() |
குனியமுத்தூர் சுகுணாபுரம் இல்லத்தில் அ.தி.மு.க ஆதரவாளர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிவருகின்றனர் |
இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே குனியமுத்தூர் சுகுணாபுரம் இல்லத்தில் அ.தி.மு.க ஆதரவாளர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிவருகின்றனர்.
முன்னதாக, அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் அப்போதே பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் ஆளுநரிடனம் அளிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் முக்கிய திமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று இதனை வழங்கினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ஆட்சி மாற்றத்துக்கு பிறகு போலீஸ் அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி.யாக கந்தசாமி நியமிக்கப்பட்டார். பெண் போலீஸ் டி.ஐ.ஜி.களான பவானீஸ்வரி, லட்சுமி ஆகியோரும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அலுவலகங்கள் உட்பட 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது இதுபோன்று மேலும் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உட்பட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் கூறப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையிலேயே இன்று கோவை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் “சி புரோஸ்” என்ற பெயரில் பிரபலமான சொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இங்கு எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் வசிக்கும் இந்த குடியிருப்பில் மிகவும் வசதி படைத்தவர்களே உள்ளனர். இந்த குடியிருப்பில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
கோடம்பாக்கம் ரங்கராஜன் தெருவில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினர் ஒருவர் வீடு, முகப்பேர் நேதாஜி தெருவில் வசித்து வரும் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீடு, ஆழ்வார்பேட்டை ஆனந்தா தெருவில் உள்ள உறவினர் வீடு, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நண்பர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதே போன்று சென்னையில் மேலும் பல்வேறு இடங்களிலும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சேப்பாக்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அடுக்குமாடிகளை கொண்ட விடுதி கட்டப்பட்டது. அந்த விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ‘டி’பிளாக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு தனி அறை உள்ளது.
இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்றும் சோதனை நடத்தினார்கள். டி.எஸ்.பி. ராமதாஸ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
அடையாறில் உள்ள சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார், அபிராமபுரத்தில் வசித்து வரும் வேலுமணியின் ஆடிட்டர் சலீம், அரும்பாக்கத்தில் அவருக்கு நெருக்கமானவரான கிருஷ்ண சாமி, வேளச்சேரியில் உறவினர் சந்திரசேகர், வில்லிவாக்கத்தில் இன்னொரு தலைமை பொறியாளரான புகழேந்தி உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன.
மாதவரம் பால் பண்ணை அருகில் உள்ள பேங்க் காலனியில் கட்டுமான நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு இன்று காலை 7.05 மணியளவில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் டி.எஸ்.பி திவ்யா தலைமையில் அதிகாரிகள் சென்றனர். வீட்டிற்குள் சென்றதும் வீட்டின் கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டனர். வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீடு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.
கோவைப்புதூரில் உள்ள அவரது சகோதரர் அன்பரசன் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் அறக்கட்டளை, நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசித்து வரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் என்ஜினீயருமான சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வீட்டின் அருகே அவர் நடத்தி வரும் அறக்கட்டளை நிறுவனத்திலும் சோதனை நடந்தது.
சந்திரசேகருக்கு சொந்தமான குளத்துப்பாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா வீடு மற்றும் புலியகுளத்தில் உள்ள கே.சி.பி அலுவலகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட பல இடங்களில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் மட்டும் இன்று ஒரே நேரத்தில் 35 இடங்களில் சோதனை நடை பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகில் உள்ள சின்னக்காம்பட்டியில் வேலுமணியின் நெருங்கிய உறவினரான மதுராந்தகி என்பவர் வசித்து வருகிறார். சப்-கலெக்டராக பணிபுரிந்து வரும் இவர் எஸ்.பி. வேலுமணியின் உறவினர் ஆவார். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதே போன்று காஞ்சிபுரத்திலும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது உள்ளாட்சித் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் 2018-ம் ஆண்டு புகார் அளித்து இருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சோதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியுள்ள 2-வது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவார். ஏற்கனவே எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் அரங்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments