அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் - அர்ச்சகர் பயிற்சி பெற்ற 208 நபருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்
சென்னை:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் - அர்ச்சகர் பயிற்சி பெற்ற 208 நபருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 12 நபர்களுக்கும் என 208 நபர்களுக்கு, குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் திருக்கோயில்களில் பணிபுரிவதற்காக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்கீழ் 24 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கும், திருக்கோயில்களில் பணிபுரிய தேர்வுசெய்யப்பட்ட அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 172 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 12 நபர்களுக்கும் என மொத்தம் 208 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 75 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை சென்னை, அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.8.2021) வழங்கினார்.
தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள அர்ச்சகர், பட்டாச்சாரியார், ஓதுவார், பூசாரி, தொழில்நுட்ப உதவியாளர், காவலர், அலுவலக உதவியாளர், மின் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, திருக்கோயில் நிர்வாகங்களின் சார்பில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டுத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தந்தை பெரியார் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரும் சமமாக வழிபட உரிமை வேண்டும் எனப் போராடினார். அதனால்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என விரும்பினார்.
தந்தை பெரியார் அவர்களின் இதயத்தைத் தைத்த முள்ளை அகற்றும் விதமாகப் தந்தை பெரியார் அவர்களின் விருப்பத்தினைச் செயல்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை வெளியிட்டார்.
அவரது வழியில் செயல்படும் இந்த அரசு தற்போது முறையாகப் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில், திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வுசெய்யப்பட்ட அனைத்துச் சாதியினை சார்ந்த 24 அர்ச்சகர்கள், இதரப் பாடச்சாலையில் பயிற்சி பெற்ற 34 அர்ச்சகர்கள் / பூசாரிகள் / பட்டாசாரியார்கள், 20 ஓதுவார்கள், 17 பரிசாரகர் / நெய்வேத்யம் / சுயம்பாகம், 23 திருவலகர்கள், 25 காவல் / நந்தவனம் பராமரிப்பு / தோட்டம், 28 தவில் / நாதஸ்வரம் (மேளம் செட்) / சுருதி, 2 திருமஞ்சனம், 3 ஸ்தானிகம், 7 மணியம் / ஊழியம் / எழுத்தர் / சீட்டு விற்பனை, 3 பரிகலம், 2 மாலை கட்டி, 3 சுப்பரபாதம் / தேவபாராயணம் / அத்யாபாகர், 3 திருவடி / வில்லம் / உக்ராணம், 1 குடைகாரர், 1 யானை பாகன், கருணை அடிப்படையில் 12 நபர்கள் என மொத்தம் 208 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும், உயிரிழந்த 3 பணியாளர்களின் குடும்பத்திற்கு 7 இலட்சம் ரூபாய்க்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்ற பட்டியலின மாணவர்கள் 5 பேர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நிமித்து ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு மற்றும் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகள், முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆன்மீக பேச்சாளர்கள் சுகி சிவம், தேச மங்கையர்க்கரசி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments