கரையும் அதிமுக ... அடுத்த விக்கெட்... திமுகவில் இணையும் "மாஜி"
சென்னை:
நாளுக்கு நாள் திமுகவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.. அதிமுகவோ சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. உட்கட்சி பூசலை சமாளிக்கவே அவர்களால் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த விக்கெட் சாய போகிறது.. முன்னாள் அதிமுக எம்பி ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் சசிகலாவின் வருகையானது மேலும் கலக்கத்தை கூட்டி உள்ளது.. இதனால் நிர்வாகிகள் எந்த பக்கம் போவது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர். ஆக மொத்தம் அதிமுக மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, எப்படியாவது நம்மை தோற்கடிக்க விடாமல் பாஜக அரசு பார்த்து கொள்ளும் என்று எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் நம்பிக்கை தந்துள்ளார். அதனால்தான் சசிகலா ஆதரவாளர்களான பலரும் சசிகலாவை சென்று சந்திக்காமல், எடப்பாடிக்காக விசுவாசம் காத்தனர். ஆனால், இப்படி மண்ணை கவ்வியது எடப்பாடிக்கே ஷாக்தானாம்.... அதனால் அதிருப்தியாகி உள்ளவர்களில் பாதி பேர் சசிகலா பக்கம் தாவுகின்றனர்.. மீதம் உள்ளவர்கள் திமுக பக்கம் மாறி வருகின்றனர்..
அந்த வகையில் பெரும்பாலான கொங்கு பிரமுகர்கள் திமுகவில் சேர்ந்தும் வருகின்றனர்.. இப்போது தஞ்சையில் இருந்து இன்னொரு புள்ளி இணைய போகிறார்.. அதிமுக முன்னாள் எம்பி கு.பரசுராமன்தான் அவர்.
தஞ்சாவூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளை அதிமுக முன்னாள் எம்.பி. கு.பரசுராமன் சந்தித்துள்ளார்... தஞ்சை எம்பி தொகுதியின் கடந்த 2014 முதல் 2019 வரை எம்பியாக இருந்தவர்தான் கு.பரசுராமன். இவர், அதிமுகவில் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் உள்ளார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார்.
2014-ல் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வைத்திலிங்கம் சிபாரிசில் சீட் வாங்கி பரசுராமன் வெற்றி பெற்றார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு மறுபடியும் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, தஞ்சாவூர் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்ததில், வைத்திலிங்கத்தின் பங்கு அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட கு.பரசுராமன் வாய்ப்பு கேட்டிருந்தார்... ஆனால் தரவில்லை.. அதுவரை உறுதியாக சீட் தருவதாக சொன்னவர்கள், கடைசி நேரத்தில் அறிவுடைநம்பிக்கு சீட் தந்துவிட்டார்கள்.. இதனால் ஷாக் ஆன பரசுராமன், தேர்தல் நேரத்தில் எந்தவித களப் பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்தார்... இதனால் வைத்திலிங்கத்துக்கும் பரசுராமனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 21-ம் தேதி இரவு செய்தியாளர்களை திடீரென சந்தித்தார் கு.பரசுராமன்.. அப்போது, திமுகவின் தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து ஆட்சி சிறப்பாக உள்ளது என்றார்... ஒரு மாஜி அதிமுக எம்பி இப்படி ஸ்டாலினை பாராட்டியது பெரும் பரபரப்பை கூட்டியது.. மீடியாக்களிலும் பெருத்த விவாதமானது..
இந்நிலையில், நேற்றைய தினம் பரசுராமன் தனது ஆதரவாளர்களோடு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தார்.
அங்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து அரை மணி நேரம் பேசினார்... திமுக ஆபீசுக்கு பரசுராமன் வந்தது மேலும் சந்தேகத்தை கிளப்பியது.. திருவையாறு எம்எல்ஏ தலைமையில் திமுகவில் சேருவதற்காக மாவட்ட செயலாளரிடம் நேரம் கேட்டுதான் கட்சி ஆபீசுக்கு பரசுராமன் தனது ஆதரவாளரோடு வந்ததாக தகவல் வெளியானது.. விரைவில் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக மாஜி எம்பி திமுகவில் இணையவுள்ளார்.. என்கின்றனர்.

No comments
Thank you for your comments