திரிசூலத்தால் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு... வைரலாகும் சிசிடிவி வீடியோ
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வெள்ளி, செவ்வாய்க்கிழமை மற்றும் ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மணி என்பவர் இக்கோவிலில் பூசாரியாக உள்ளார். மாலை கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர், காலை வழக்கம் போல கோவிலை திறக்க வந்தபோது, கோவில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் உண்டியலில் இருந்த காசுகள் சிதறிக்கிடந்துள்ளன. கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டதை, அறிந்த அக்கிராம பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில், கோவிலுக்குள் நுழையும் மர்ம நபர் ஒருவர், கோவிலில் திரிசூலத்தை கையில் எடுத்துக்கொண்டு, உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளை அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காட்சியை கைப்பற்றி, விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விருதாச்சலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது இதே போல பல முறை கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விடுகின்றனர்.
கோவில் உண்டியலில் 50 ஆயிரத்திற்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கைை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கைை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments