Breaking News

சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த யூ-டியூபர் பப்ஜி மதன் தலைமறைவு.. தீவிர விசாரனையில் களமிறங்கிய காவல்துறை

சென்னை:

சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த யூ-டியூபர் பப்ஜி மதன் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாகியுள்ளனர்.

ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு லைவ் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ் சொல்லித்தருவதாக கூறி, மதன் எனும் யூ-டியூப் சேனலை நடத்தி வருபவர் மதன்.

இவரது ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்த வரவேற்பு, 'டாக்ஸிக் மதன் 18+' என்கிற மற்றொரு யூ-டியூப் சேனலையும் தொடங்கியுள்ளார்.

இந்த யூ-டியூப் சேனல்களில் இவர் பதிவேற்றியுள்ள பல ஆபாச வீடியோக்கள் படு கேவலமானவை. தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே ஆடுவது இவரது வாடிக்கை. பெண்களை இன்னும் மோசமான வார்த்தைகளால் வசைபாடியபடி விளையாடுவாராம்.

சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களால் எதுவும் செய்ய முடியாது, தன்னிடம் வக்கீலும், பணமும் இருக்கிறது என மிரட்டியுள்ளார் மதன். ஆனால் சில இளம் பெண்கள், அதிலும் சிறுமிகள், மதனுடன் நட்பு பாராட்டிய விநோதமும் அரங்கேறியுள்ளது. ஒரு சிறுமியை, தான் 3வது காதலியாகத்தான் வைத்துக் கொள்ள முடியும் என மதன் சொல்ல, உன்கூட இருந்தால் போதும் வச்சிக்கோ என அந்த சிறுமி சொல்லும் ஆடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி கேட்போரை கிறுகிறுக்க வைத்தது.

ஆபாச உரையாடல் வீடியோக்கள் அவரது யூடியூப் தளத்திற்கு சப்ஸ்கிரைபர்களை அதிகரித்துள்ளது. மதன் யு-டியூப் சேனலுக்கு 7 லட்சத்திற்கு அதிகமாகவும், டாக்ஸிக் மதன் 18+ யு-டியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர். ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி போட்டியாளர்களிடமிருந்து பணம் நன்கொடை செய்தும் இவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

மதனின் அடாவடிகள், ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டனர். ஆனால் இன்று மதியம் வரை அவர் போலீஸ் முன்பு ஆஜராகவில்லை. கைது செய்து விடுவார்கள் என்று நினைத்து விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், மதன் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ ஆகிய யூ-டியூப் சேனல்களை முடக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கவும் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

விபிஎன் வசதியை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை பப்ஜி மதன், குழப்பி வருவதால், காவல்துறை அவர் எங்கே இருக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறு செய்த மதன், இப்போது அதே மாதிரி தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தலைமறைவாகவும் இருந்து வருகிறார். ஆனால் அவரை கைது செய்வதில் காவல்துறை தீவிரம் காட்டுவதாகவும், எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது யூடியூப் இணையதளத்தில் வேறு யாரும் நண்பர்களும் இணைந்து செயல்பட்டு உள்ளனரா என்பது பற்றி புளியந்தோப்பு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்படி யாருக்கேனும் தொடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


No comments

Thank you for your comments