ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :
கொரோனா பரவல் தடுப்பு பொது ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது, இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை. ஊரடங்கு காலத்தில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை அரசு தடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே 10ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதிவரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தற்போது தளர்வுடன் ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காய்கறி கடைகள், மளிகை கடைகள் என கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் மக்கள் வழக்கம் போல சாலைகளில் வாகனங்களில் சுற்ற ஆரம்பித்து விட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை பார்த்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
கீழே உள்ள முக்கிய செய்திகளை படிக்க கிளிக் செய்யவும்
*தொழில் நிறுவனங்கள் கடனை செலுத்த 6 மாத அவகாசம் கோர 12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
**விரைவில் கூடுகிறது தமிழக சட்டசபை - பட்ஜெட் தாக்கல்...!
***கோவில்களின் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு
கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் ஊரடங்கு நேரத்தில் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி, “ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. இயல்பு நிலை திரும்பியது போல் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை. ஊரடங்கு காலத்தில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் முதல் அலையில் காவல்துறை கடுமையாக நடந்துகொண்டது. தற்போது காவல்துறை கனிவுடன் நடந்துகொள்வதை பொதுமக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படவில்லை” என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் ஊரடங்கில் மக்கள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments
Thank you for your comments