அபாய கட்டத்தில் நடிகர் விவேக்.. மருத்துவர்
சென்னை:
நடிகர் விவேக்கின் இதயத்தில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. எனினும் அவர் மோசமான நிலையில்தான் இருக்கிறார் என தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
விவேக் நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்றைய தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தடுப்பூசி குறித்து எதிர்மறையான கருத்துகள் இணையத்தை சுற்றி வலம் வந்தன. இதுகுறித்து வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜு சிவசாமி உள்ளிட்ட மருத்துவர்களும் சுகாதாரத் துறை செயலாளரும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது மருத்துவர் கூறுகையில் நடிகர் விவேக்கிற்கு அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய அவரை அவரது மனைவியும் , மகளும் அழைத்து வந்தார்கள். அப்போது அவருக்கு அவசர உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாத நிலையில் இருந்தார். இதையடுத்து ஆஞ்சியோ செய்ததில் அவருக்கு இடது கரோனரி ஆர்டரியில் 100 சதவீதம் அடைப்பு இருந்தது. பொதுவாக வலது கரோனரி ஆர்டரி, இடது கரோனரி ஆர்டரி என இரண்டு இருக்கும்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் அவருக்கு ரத்தக் குழாய்களில் இருந்த அடைப்பு முழுவதும் நீக்கப்பட்டது. இதையடுத்து அவரது இதயத்தை சீராக இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ஆபத்தான நிலையில்தான் உள்ளார். 24 மணி நேரம் கழித்தே சொல்ல முடியும் என்றார் மருத்துவர்.

No comments
Thank you for your comments