ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் 104 அறிமுகம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை:
மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கு உடனடியாக அணுக அவசர எண் 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
கோவிட்-19 தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநிலத்திலுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments