Breaking News

அறிஞர் டாக்டர். இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவு... நே.ஜ.யூனியன் தலைவர் டாக்டர் கா. குமார் இரங்கல்

 அறிஞர்    முனைவர். இரா. கிருஷ்ணமூர்த்தி


சென்னை,  மார்ச் 4:

தினமலர் நாளிதழ் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி(88) இன்று (மார்ச் 4) காலமானார். அவரது மறைவிற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், 

பன்முகத்திறன்கள் படைத்த தினமலர் நாளிதழ் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி(88) அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு, நசுங்கி வரும் பத்திரிகை துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.


சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழ் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றினார். தமிழகத்தின் தென்கோடியான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் என்ற கிராமத்தில் 18.01.1933ல் பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீ டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பேற்ற இவர், தினமலர் நாளிதழை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தார்.

திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளைத் துவக்க காரணமாக இருந்தார். 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார்.  இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்து பெரும் ஆய்வு மேற்கொண்டவர். 

நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதன் முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர்.  நாணயவியல் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தொடர்பியல் துறைக்கு தமது சொந்த செலவில் 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டி தந்தவர். 

பத்திரிகையை துறையில் சிறந்து விளங்கியதால் தமிழ் அச்சு மொழி வளர்ச்சியைப் பண்படுத்தியவர். கணினிக்கு ஏற்றவகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவுமிக்க தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர். 

இப்படி, பன்முகத்திறன்கள் படைத்த முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களது மறைவு அனைவருக்கும் மீளா துயரம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பத்திரிகை துறை சார்ந்த சக தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அனைவரும் மீளா துயரத்திலிருந்து மீண்டு வரவேண்டும்... அவரது புண்ணிய ஆத்மா இறைவனடியில் இளைப்பார வேண்டும். 

இவ்வாறு, நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் விடுத்துள்ள இரங்கல் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 




No comments

Thank you for your comments