Breaking News

மயிலை அறுபத்து மூவர் திருவிழா... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சென்னை, மார்ச் 21-
Grand prelude to Mylapore's arupathumoovar festivalசென்னை மயிலாப்பரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்தி மூவர் திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சென்னையில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா மயிலாப்பூர் பங்குனி உத்திர திருவிழா தான். அதிலும் அறுபது மூவர் திருவிழா மிகச்சிறப்பானது. பஞ்ச மூர்த்திகள் மற்றும் அறுபது மூவர் வரிசையாக வீதிக்கு வருவார்கள்.

பக்தர்களுக்கு முதலாவதாக தரிசனம் தருபவர் சிவநேசன் செட்டியார். அறுபத்து மூவர் திருவிழா மாலையில் நடைபெற்றாலும் காலை நேரத்தில் 'பூம்பாவை உயிர்பித்தல் நிகழ்ச்சி' பிரச்சித்தி பெற்றதாகும்.

திருமயிலையில் வாழ்ந்து வந்த வணிகர் சிவநேசர், சிறந்த சிவபக்தர். இவரின் ஏழு வயது மகள் பூம்பாவை. ஒரு நாள் பூப்பறிக்கச் சென்ற பூம்பாவையை பூநாகம் ஒன்று தீண்டியது. அவள் இறந்தாள். பெரும் துயரத்துடன் பூம்பாவையின் உடலை தகனம் செய்த சிவநேசர், அவளின் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் அடைத்து கன்னிமாடத்தில் வைத்திருந்தார்.

இந்த நிலையில், திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு விஜயம் செய்தார். இதையறிந்த சிவநேசர் அங்கு சென்று, ஞானசம்பந்தரை வணங்கி அவரிடம், பூம்பாவைக்கு நிகழ்ந்ததை விவரித்தார். அவர் மேல் இரக்கம் கொண்ட சம்பந்தப் பெருமான் திருமயிலைக்கு வந்தார்.

ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கினார். பிறகு, பூம்பாவையின் சாம்பல் நிறைந்த குடத்தை எடுத்து வரச்செய்த ஞானசம்பந்தர், ‘மட்டிட்ட புன்னையங் கானல்...' என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மாண்ட பூம்பாவை உயிர் பெற்று, 12 வயதுப் பெண்ணாக வெளி வந்தாள்.

பெரிதும் மகிழ்ந்த சிவநேசர், தன் மகள் பூம்பாவையை மணந்துகொள்ளுமாறு திருஞானசம்பந்தரை வேண்டினார். ஆனால், சம்பந்த பெருமான் மறுத்துவிட்டார். இதன் பிறகு நெடுநாள் வாழ்ந்த பூம்பாவை, தொடர்ந்து சிவ வழிபாட்டில் திளைத்திருந்தாள். இறுதியில் சிவ தியானத்தில் இருந்த நிலையில் முக்தியடைந்தாள்.

பங்குனி பெருவிழா
இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 13ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து 14ம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்
ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. பங்குனி பெருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்திருவிழா நேற்று நடந்தது.

மாட வீதிகளில் உலா
தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. 4 மாடவீதிகளிலும் கபாலீஸ்வரர் தேரில் அசைந்தாடி வரும் காட்சியை காண கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள் பாலித்தார்.

அறுபத்துமுவர் திருவிழா
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூவர் நாயன்மார்களோடு காட்சி அளிக்கிறார். இந்த விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூர் மாடவீதிகளில் காலை முதலே பக்தர்கள் குவிந்துள்ளனர்.

No comments

Thank you for your comments