டெல்லியில் சார்க் பேரிடர் மேலாண்மை மையம்... இந்தியா- பாக். ஒப்புதல்!
டெல்லியில் புதிய சார்க் பேரிடர் மேலாண்மை மையம் தொடங்க
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை
அமைச்சர்களின் 37 ஆவது மாநாடு நேபாளத்தில் நடைபெற்று வந்தது. இதில்
இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை
உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சார்க் கூட்டத்தில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர்
நிர்வாகம் உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சார்க்
மண்டலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் நிர்வாகம் மையத்தை தங்கள்
நாட்டில் அமைக்க இந்தியா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள்
விருப்பம் தெரிவித்தன. பின் பூடான், வங்கதேசம் விலகிக் கொண்டது. இறுதியில்
இந்தியாவும், பாகிஸ்தானும் அதற்கான போட்டியில் இருந்தன.
இந்நிலையில், புதிய பேரிடர் மேலாண்மை மையத்தை இந்தியாவில் நிறுவ
சார்க் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள
மையத்தின் விரிவாக்கமாக இந்தியாவில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சார்க் மாநாடு இந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர்
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள நிலையில் சார்க் அமைப்பின் தலைமை இதற்கு
ஒப்புதல் அளித்துள்ளது.
சார்க் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான்
வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து
ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட உடன்பாடே புதிய மையம்
டெல்லியில் அமைய காரணம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக மாநாட்டில் பேசிய சுஷ்மா சுவராஜ் புதிய இயற்கை பேரிடர்
மேலாண்மை மையம் இந்தியாவில் அமைய அனைத்து நாடுகளும் ஆதரவு தரும் என்று
நம்பிக்கை தெரிவித்தார். சார்க் மாநாடு கூட்டங்கள் மிகவும் கூட்டுறவு சூழல்
மிக்கதாக அமைந்ததாக சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்
சர்தாஜ் அஜிஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments