Breaking News

பெரியார் சிலைகளை மறைக்கும் திட்டம் எதுவும் இல்லை: தேர்தல் ஆணையம் உறுதி

Does not plan to hide the Periyar statues: EC confirmedசென்னை, மார்ச் 12-
தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை மறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் விதிமுறை என்று கூறி, பல இடங்களில் பெரியார் சிலைகளை மறைத்தும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளையும் தேர்தல் ஆணையம் அகற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரியார், பெண் விடுதலைக்காக போராடியவர் என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக தொண்டுகளில் ஈடுபட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலையை மறைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.ராஜகோபாலன், ‘தந்தை பெரியார் சிலையை மறைக்க உத்தரவு எதுவும் போடவில்லை. மாநிலத்தில் எங்காவது மறைக்கப்பட்டிருந்தால், இனி பெரியார் சிலையை மறைக்க மாட்டோம்' என்று கூறினார்.

மேலும் திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை அகற்றாமல் இருப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளை தேர்தல் அதிகாரிகள் மறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments

Thank you for your comments