இந்திய தேசிய லீக் உட்பட மேலும் 5 கட்சிகளுடன் நாளை ஜெ. பேச்சுவார்த்தை
சென்னை, மார்ச் 19-
அதிமுக சார்பில் ஏற்கனவே பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
நடைபெற்றுள்ள நிலையில் ஜெயலலிதா மேலும் 5 கூட்டணி கட்சித் தலைவர்களை நாளை
அல்லது நாளை மறுநாள் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய உழவர் உழைப்பாளர்
கட்சித் தலைவர் வேட்டவலம் மணி கண்டன், மூவேந்தர் முன்னேற்ற கழகம் தலைவர்
ஸ்ரீதர் வாண்டையார், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள்
முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
போயஸ் கார்டனில் இருந்து எந்த நேரமும் சந்திக்க அழைப்பு வரும்,
சென்னையில் தங்கி இருங்கள் என்று இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படும் பசும்பொன் மக்கள் கழக தலைவர்
இசக்கிமுத்து, ஆர்ச் பிஷப், பிரகாசம், தாவுத் மியாகான் ஆகியோரையும்
முதல்வர் ஜெயலலிதா விரைவில் அழைத்து பேசுவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு கட்சித்தலைவர்
செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அகில இந்திய
பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், இந்திய தவ்ஜீத் ஜமாத்
தலைவர் பாக்கர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் மாநில
முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர்
நாராயணன் ஆகிய 7 கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து பேசியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments