Breaking News

தமிழகத் தேர்தல் பாதுகாப்புக்கு... 300 கம்பெனி துணை ராணுவப் படை வருகிறது

சென்னை, மார்ச் 17-
தமிழக சட்டசபைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 300 கம்பெனி துணை ராணுவப் படை வரவிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் 9630 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றம் அவர் தெரிவித்துள்ளார். வாக்குப் பதிவை வீடியோ கேமரா, வெப் கேமரா
மூலம் கண்காணிக்கவுள்ளதாகவும் லக்கானி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் இதுதொடர்பாக ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி:

700 கூடுதல் வாக்குச் சாவடிகள்
தமிழகம் முழுவதும் 65,616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை தவிர கூடுதலாக 700 வாக்குச்சாவடிகள் அமைக்க அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதுபற்றி தேர்தல் பார்வையாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து அனுமதி அளித்த பின்னர் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

9630 பதற்றமானவை
தமிழகத்தில் எந்த எந்த வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டன. அதன்படி தமிழகம் முழுவதும் 9,630 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 9224 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டன.


கேமரா மூலம் கண்காணிப்பு
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அதிக பதற்றமானவை, மிதமான பதற்றமானவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா, வீடியோ கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். மேலும் அந்த வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

300 கம்பெனி துணை ராணுவம்
சட்டசபைத் தேர்தல் பாதுகாப்புக்காக 400 கம்பெனி துணை ராணுவத்தினரை அனுப்புமாறு தேர்தல் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர்கள் 275 முதல் 300 கம்பெனி வரை அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மே முதல் வாரத்தில்
மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் துணை ராணுவத்தினர் மே மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருவார்கள். ஒரு கம்பெனியில் 72 பேர் இடம் பெற்றிருப்பார்கள்.

சித்தார்த்தின் விழிப்புணர்வுக் குறும்படம்
தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரத்து 449 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு பற்றி நடிகர் சித்தார்த் நடித்த விழிப்புணர்வு குறும் படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

மத்திய அரசின் விதி மீறல்கள்
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் டெலிவிஷன் மற்றும் வானொலியில் மத்திய அரசின் விளம்பரங்கள் வருவதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அந்த கடிதத்துக்கு பதில் வந்த பின்னர் விளம்பரங்கள் நிறுத்தப்படும் என்றார் லக்கானி.


No comments

Thank you for your comments