தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: வாசன் வலியுறுத்தல்
தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு
கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும்
கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தனியார் நடத்தும் கல்வி
நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் இந்த இட
ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்துள்ளது.
இது வரவேற்கக்கூடிய அம்சமாகும். இதனை மத்திய அரசு முழுமையாக
ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவர
வேண்டும். இந்த கொள்கையை முறையாக கடைப்பிடிப்பதற்காக ஒரு சிறப்புக் குழுவை
அமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மத்திய அரசு இக்கொள்கையை ஏற்று அமல்படுத்தினால், சாதாரண
பிற்படுத்தப்பட்ட மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் கல்வி பெறுவதிலும்,
வேலை வாய்ப்பிலும் பெரிதளவில் பயன்பெறுவார்கள். எனவே மத்திய அரசு தேசிய
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, செயல்படுத்தி, இதர
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைவரும் பயன்பெற வழி வகுக்க
வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments