Breaking News

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று துவக்கம்

டெல்லி, பிப்.23:
Budget Session of Parliament begins todayநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி, இரு அமர்வுகளாக மே மாதம் 13ம் தேதி
வரை நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று முதல் மார்ச் மாதம் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. அதையடுத்து, 2வது அமர்வு ஏப்ரல் மாதம் 25ம் தேதி தொடங்கி மே மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரையாற்றுகிறார். அப்போது மத்திய அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை 25ம் தேதியன்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். 26ம் தேதியன்று பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்வார். அதையடுத்து 29ம் தேதியன்று 2016-17ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடளுமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவையை சுமூகமாக நடத்த அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புத் தரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் ஜேஎன்யு பல்கலைக்கழக விவகாரம் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது, பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவதற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேபோல் மீனவர்கள் பிரச்சினை, செம்மரகடத்தல், சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக சேர்ப்பது உள்ளிட்ட தமிழக பிரச்சினைகள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

No comments

Thank you for your comments