சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த அமெரிக்கா, ரஷ்யா முடிவு
வாஷிங்டன், பிப்.23:
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு எதிராக சில அமைப்பினர் போராடி
வருகின்றனர். இது தவிர ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வேறு அட்டகாசம் செய்து
வருகிறார்கள். உள்நாட்டு போரால் சிரியா மக்கள் கடும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இதுவரை சிரியாவில் நடந்த வன்முறை
சம்பவங்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டுள்ளனர். அதிபர் ஆசாத் கேட்டுக் கொண்டதன் பேரில் ரஷ்யா தனது
ராணுவத்தை சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க சிரியாவில் நடக்கும்
உள்நாட்டுப் போரை நிறுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும்
திங்கட்கிழமை தொலைபேசியில் கலந்தாலோசித்துள்ளனர்.
போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தான் கடினம் என்று அமெரிக்கா
தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல்
அமலுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் ஐஎஸ்ஐஎஸ்
தீவிரவாதிகள், அல் கொய்தாவின் கிளையான அல் நுஸ்ரா அமைப்பினருக்கு எதிரான
தாக்குதல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா உள்நாட்டு போரை நிறுத்தும் முடிவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வரவேற்றுள்ளார்.
No comments
Thank you for your comments