சாலவாக்கம் அருகே 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
அதிகாரிகள் கொள்முதல் செய்ய தாமதித்ததால் பாதிப்பு என விவசாயிகள் குற்றச்சாட்டு – அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில், மழையில் நனைந்ததால் சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நெல் மூட்டைகள் தேக்கமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முழுவதும் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நெல் மூட்டைகளை அதிகாரிகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வராமல் தாமதப்படுத்தியதே இந்த பாதிப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், நகைகளை அடகு வைத்து கடன் பெற்று விவசாயம் செய்த நிலையில், அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, சேதமடைந்த நெல்லுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments