Breaking News

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்: 2-வது ஆண்டாக ரத்தான தேரோட்டம் – பக்தர்கள் கடும் அதிருப்தி!


 காஞ்சிபுரம் | ஜனவரி 29, 2026

காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் 54-வது திருத்தலமான உலகளந்த பெருமாள் கோவில் தை மாத பிரம்மோற்சவத்தில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேரோட்டம் இந்த ஆண்டும் நடைபெறாதது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பழுதடைந்த தேர் - தொடரும் மெத்தனம்:

இக்கோவிலின் மரத்தேர் பல பாகங்கள் சேதமடைந்து பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானபோது, தேரைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறையினரின் மெத்தனப் போக்கால், தேர் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

பத்திரிகையில் வாக்குறுதி; களத்தில் ஏமாற்றம்:

கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவப் பத்திரிகையில், ஏழாம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும் என அச்சிடப்பட்டிருந்தது. சொந்தத் தேர் பழுதடைந்த நிலையில், பத்திரிகையில் எப்படி தேரோட்டம் என அறிவிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, "பிற கோவிலின் தேரை வாங்கி வந்து தேரோட்டம் நடத்தப்படும்" எனச் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்திருந்தார்.



நிர்வாகத் தோல்வியால் ரத்தான உற்சவம்:

பத்திரிகையில் குறிப்பிட்டபடி நேற்று காலை தேரோட்டம் நடக்கும் என ஆவலுடன் வந்த பக்தர்கள், "தேரோட்டம் ரத்து" என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

செயல் அலுவலர் சா.சி. ராஜமாணிக்கம் விளக்கம்:

"பிற கோவில்களில் இருந்து தேரை எடுத்து வர நேற்று இரவு வரை முயற்சி செய்தேன். ஆனால், நிர்வாகச் சூழல் காரணமாக வேறு கோவிலில் தேர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதால், தேரோட்டம் நடத்த முடியவில்லை."

பக்தர்களின் கோரிக்கை:

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு முன்பாவது மரத்தேரை முழுமையாகச் சீரமைத்து, நான்கு ராஜவீதிகளிலும் பெருமாள் பவனி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





No comments

Thank you for your comments