75% வேலை முடிந்தும் நிதி இல்லை: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட இருளர் சமூக மக்கள்!
தவிப்பில் 49 குடும்பங்கள்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட இருளர் சமூகக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 49 குடும்பங்களுக்கு, கடந்த ஆண்டு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, பயனாளிகள் தங்களின் சேமிப்பு மற்றும் கடன்களைக் கொண்டு சுமார் 75% வரை வீடுகளைக் கட்டி முடித்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்த நிலைகளுக்கான தவணைத் தொகையை வழங்காமல் அதிகாரிகள் நீண்டகாலமாக இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முற்றுகைப் போராட்டம்:
தவணைத் தொகை கிடைக்காததால் வீடுகளை முழுமையாக முடிக்க முடியாமலும், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும் இக்குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காவல்துறை பேச்சுவார்த்தை:
அலுவலகத்தை மக்கள் சூழ்ந்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து சலசலப்பு தணிந்தது.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments