திட்டக்குடியில் பரபரப்பு! 3 மாதங்களாக காலியாக உள்ள நகர்மன்ற தலைவர் பதவி - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்!
திட்டக்குடி | டிசம்பர் 29, 2025
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அரசியல் குழப்பம் தற்போது முற்றுகைப் போராட்டமாக வெடித்துள்ளது.
பின்னணி:
திட்டக்குடி நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்த வெண்ணிலா கோதண்டம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, நகராட்சிக்குச் சொந்தமான அரசு வாகனத்தைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்றது மற்றும் ஓட்டுநரைப் பணிநீக்கம் செய்தது உள்ளிட்ட அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கவுன்சிலர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்:
இதனைத் தொடர்ந்து, மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து வெண்ணிலா கோதண்டம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் விளைவாக அவர் தனது பதவியை இழந்தார்.
முற்றுகைப் போராட்டம்:
தலைவர் பதவி இழந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், புதிய நகர்மன்றத் தலைவரை நியமிக்க நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்துப் பலமுறை மனு அளித்தும் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் இன்று திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டனர்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். இந்த முற்றுகைச் சம்பவத்தால் திட்டக்குடி நகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments