Breaking News

திட்டக்குடி அருகே கோரம்: அரசுப் பேருந்து டயர் வெடித்து கார்கள் மீது மோதல் - 7 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு!


 திட்டக்குடி | டிசம்பர் 24, 2025

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

நடந்தது என்ன? திருச்சியிலிருந்து சென்னை நோக்கி இன்று அரசுப் பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: டயர் வெடித்த வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புகளைத் தாண்டி எதிர்த்திசையில் (சென்னையிலிருந்து திருச்சி நோக்கி) வந்த இரண்டு கார்களின் மீது மிகக் கொடூரமாக மோதியது.

7 பேர் பலி: இந்த மோதலில் இரண்டு கார்களும் உருக்குலைந்து அப்பளம்போல் நொறுங்கின. காருக்குள் இருந்த 7 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணை: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநத்தம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.

No comments

Thank you for your comments