Breaking News

"மோடி அரசை எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!" - 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் கி. வீரமணி காஞ்சியில் காட்டம்.


 காஞ்சிபுரம் | டிசம்பர் 24, 2025

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், "ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஆட்சி vs திராவிட மாடல் ஆட்சி" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை: 

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த கி. வீரமணி, "ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) மத்திய அரசு பல்வேறு குளறுபடிகளைச் செய்துள்ளது. பெயர் மாற்றம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என உலக அளவிலான பொருளாதார நிபுணர்கள் மோடி அரசை எச்சரித்துள்ளனர். இது குறித்துப் பல சர்வதேச நாளிதழ்களும் கட்டுரைகள் வாயிலாகத் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளன" என்று குறிப்பிட்டார்.

சீமானுக்கு மறைமுகப் பதிலடி: 

பெரியார் குறித்து அண்மைக்காலமாக எழுந்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "பெரியாரின் வாழ்வியலை முழுமையாக அறியாமல், அவரைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் பைத்தியங்களாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் வைத்தியம் தேவை. அத்தகையவர்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாகச் சாடினார்.


பங்கேற்றோர்: 

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments