Breaking News

காஞ்சிபுரத்தில் போலி பட்டுச்சேலைகள் விற்பனையை தடுக்க தவறி விட்டது திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், டிச.10:

காஞ்சிபுரத்தில் போலி பட்டுச்சேலைகள் விற்பனையை தடுக்க தவறி விட்டது திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை குற்றம் சாட்டினார்.



காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் அருகில் நடைபெற்ற கூட்டணக் கட்சிகளுடனான பொதுக்கூட்டத்தில் திறந்த வேனில் நின்று கொண்டே பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது.

உலகப்பிரசித்தி பெற்றது காஞ்சிபுரம் பட்டு என்பார்கள்.ஆனால் காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலைகள் அதிகமாக விற்பனையாகின்றன.

இதனால் கைத்தறி நெசவாளர்கள் நலிந்து போய் விட்டார்கள்.கைத்தறிச் சேலை எது, விசைத்தறிச் சேலை எது என்று மக்களிடையே திமுக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருப்பதால் முகவர்கள் மூலம் பட்டுச்சேலை வாங்க வருபவர்கள் போலி பட்டுச் சேலைகளை வாங்கி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். 


போலி பட்டுச் சேலைகள் விற்பனைய தடுக்கவும்,நெசவாளர்களை காப்பாற்றவும் தவறி விட்டது திமுக அரசு. தமிழகத்தில் பல மாவட்டங்களில் நெசவாளர்களுக்கு கூலி வழங்குவதில் வித்தியாசம் காணப்படுகிறது. பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகத்தில் 75 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இது அனைத்தும் திமுகவின் வாக்குகள்.அதனால் தான் சிறப்பு வாக்காளர் திருத்தம் வேண்டாம் என்று திமுக சொன்னது.இது தொடர்பாக உச்சநீதிமன்றம் சென்றும் திமுக தோல்வியடைந்து விட்டது.


திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தும் ஆட்சியரால் 144 தடை உத்தரவு பிறப்பித்து தீபம் ஏற்றாத அரசு தான் திமுக அரசு.

இதற்கும் உச்ச நீதிமன்றம் சென்றும் திமுக தோல்வியடைந்ததால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.பள்ளிகளில் போதைப்பொருட்கள் விற்பனை சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் 32 சிறை மரணங்கள் நடந்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் பேசினார்.

இக்கூட்டத்திற்கு அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத்.பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாஜக மாவட்ட தலைவர் யு.ஜெகதீசன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் பாஜக அனைத்துப்பிரிவு நிர்வாகிகள்,அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments