கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா டிச.24ம் தேதி துவக்கம் ...!
கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் 'கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2025' நடைபெற உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் நந்தகோபால், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது, கோவை கொடிசியா வளாகத்தில் டிச. 24 ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2025ன் 11வது பதிப்பு நடைபெற உள்ளது.
சுமார் ஒன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவில் மெகா ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு அரங்குகள், உணவு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது.
11வது பதிப்பாக நடைபெறும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2025ல் வீட்டு உபயோக சாதனங்கள், சமையலறை பொருட்கள், பர்னிச்சர்ஸ், தங்கம் மற்றும் வைர நகைகள், ஜவுளி வகைகள், உடற்பயிற்சி சாதனங்கள், பரிசு பொருட்கள், சூரிய ஒளி சாதனங்கள், காலணிகள், பாரம்பரிய ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், ஆட்டோ மொபைல் உதிர் பாகங்கள், சுற்றுலா செல்வதற்கான தகவல் அரங்குகள், நிதி நிறுவனங்கள் என நுகர்வோர்களின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த கண்காட்சி அமைய உள்ளது.காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை ஷாப்பிங் திருவிழா நடைபெறும். இந்த கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் ரூ.50 என வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வர உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க நினைப்போர் இங்கு சென்று குடும்பத்துடன் ஷாப்பிங் செய்து மகிழலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது. கொடிசியா செயலாளர் யுவராஜ், கண்காட்சி துணைத் தலைவர் வரதராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments