காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனையகத்தில் விற்பனை இலக்கு ரூ.10 கோடி - அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
காஞ்சிபுரம், நவ.16:
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த விற்பனை நிலையம் ரூ3 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு கடந்த 13.11.25 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி இந்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் கூறியது..
மிகத்தரமான பட்டு மற்றும் அசல் சரிகை சேலைகள்,ஆரணி, திருப்புவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு மற்றும் சேலம் வெண்பட்டுச் சேலைகள், பரமக்குடி பம்பர் காட்டன் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், வீட்டு உபயோக துணி ரகங்கள் உட்பட அனைத்து கைத்தறி ரகங்களும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வளாகத்தில் மட்டும் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரமானதாகவும், கைத்தறிகளாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்வதால் பொதுமக்கள் இவற்றை வாங்கி பயன்படுத்துமாறும் அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
ஆய்வின்போது எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கைத்தறித்துறை அதிகாரிகள், நெசவாளர்கள் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments