Breaking News

காஞ்சிபுரம் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி வேடல் கிராமத்தினர் சாலை மறியல்-அதிகாரிகள் சமரசம்

காஞ்சிபுரம்,செப்.24:

காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும், மாற்று கிராமத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியதைக் கண்டித்தும் பொதுமக்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியல் செய்தனர்.அதிகாரிகள் சமரசம் செய்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.மனு கொடுத்தவர்களில் 6 பேருக்கு மட்டுமே இலவச வீட்டு மனைப் பட்டா கொடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் பக்கத்து கிராமங்களான கட்டவாக்கம், தேனம்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 49 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.


எனவே வேடல் கிராமத்தைச் சேர்ந்த இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கிராமத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூர் செல்லும் சாலையில் வேடல் கிராமப் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காலூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சங்கர் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினரும்,வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments

Thank you for your comments