Breaking News

எந்த இயக்கமும் தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை – எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

காஞ்சிபுரம், ஆக.21:

எந்த இயக்கமும் தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை என வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.



காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் அருகில் திறந்த வேனில் நின்று கொண்டே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது..எந்த மரமும் உடனே வளர்ந்து விடாது,கன்று நட்டு,செடியாக வளர்ந்து,தினசரி தண்ணீர் ஊற்றி அதன் பின்னர் தான் அது வளர்ந்து பூப்பூத்து காய் காய்க்கும்,கனிகளும் தரும்.அப்படித்தான் அதிமுகவும் வளர்ந்தது.

எம்ஜிஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டு காலம் கடுமையாக உழைத்து ஆட்சியைப் பிடித்தார்.  ஜெயலலிதாவும் அப்படித்தான் எடுத்தவுடன் முதல்வராகி விடவில்லை, அண்ணாவும் நிறைய போராட்டங்களை சந்தித்து, மொழிக்காக சிறை சென்று, நாட்டு மக்களுக்கு நல்லது செய்து உயர்ந்தார்.

நமது கட்சித் தலைவர்கள் அனைவரும் அர்ப்பணித்து வாழ்ந்து உயர்ந்து அதிமுகவையும் அடையாளம் காட்டி சென்றிருக்கிறார்கள்.



அதிமுக 31 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்ததால் தான் இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்திருக்கிறது.

எனது அரசியல் வாழ்க்கையும் 51 ஆண்டுகள்.நான் சாதாரண கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று உங்கள் முன்னால் உயர்ந்து நிற்கிறேன்.

உழைப்பால் உயர்ந்தவன். சிலர் எந்த உழைப்புமே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள். அது நிலைக்காது, உழைப்பு தான் நிரந்தரம்.அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உட்பட யாரும் உடனடியாக முதல்வராகி விடவில்லை.

ஒரு சில திரைப்படங்களில் நடித்தவுடன் முதல்வர் ஆகி விட முடியாது. இதெல்லாம் தெரியாமல் சிலர் கட்சி தொடங்கியவுடன் இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள்.

நாங்கள் அப்படியல்ல, உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். மக்களிடம் செல்வாக்கு பெற்றதைப் போலவும்,அவர்கள் வந்து தான் மக்களை காப்பாற்றப் போவது போலவும் சிலர் அடுக்கு மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.யாரென்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அதிமுகவுக்கு ஜாதியோ, மதமோ கிடையாது.வறட்சி,புயல்,கரோனா ஆகியனவற்றையெல்லாம் வென்ற இயக்கம் அதிமுக.கரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பற்றியது அதிமுக அரசு.

மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுங்கள் என்று பிரதமர் மோடியும் நமது அரசை பாராட்டினார்.கரோனா காலத்தில் நியாயவிலைக் கடை மூலம் இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுத்தோம்.அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கினோம். 

விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டம்,மும்முனை மின்சாரம்,பயிர்க்கடன்கள் இருமுறை தள்ளுபடி, நெசவாளர்களுக்கு மின்சார மானியம் உட்பட ஏராளம் நலத்திட்ட உதவிகள் வழங்கினோரம்.


அதிமுக ஆட்சி வந்தவுடன் ஏழைத்தொழிலாளர்கள்,விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.இலவச வேட்டிசேலை வழங்கும் திட்டம்,தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டம்,மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியனவை செயல்படுத்தப்படும் என்றும் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முன்னதாக கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் வரவேற்று பேசினார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.வைகைச் செல்வன் முன்னிலை வகித்தார்.அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments