காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், ஜூலை:
சர்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவுத்துறையும், காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையும் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலக வளாகத்தில் தன்னார்வ ரத்ததான முகாமை நடத்தினார்கள்.
கூட்டுறவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் 26 பேர் ரத்த தானம் செய்தனர். அரசு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் பாஸ்கோ பிரேம்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும், கூட்டுறவுத்துறையும் இணைந்து நடத்திய கண்தான முகாமில் 45 பேர் தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதிக்கடிதம் வழங்கினார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.26 கோடி கடனுதவிகளும் வழங்கப்பட்டன. ரத்ததானம் மற்றும் கண்தானம் செய்த கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கினார்.
No comments
Thank you for your comments