Breaking News

பாலுசெட்டி சத்திரம் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள் போராட்டம் - கலெக்டர் அலுவலகம் முற்றுகை

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலுசெட்டி சத்திரம் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் .

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



சென்னையில் இருந்து-பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை  சாலையில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகிறது. 

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்  மேம்பாலங்கள் கட்டி ஆறு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட் குழி கிராம பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு எதிரே பாலு செட்டி சத்திரம் பகுதியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், காவல் நிலையம், அத்தியாவசிய பொருட்கள் கடைகள் உள்ளிட்டவைகளுக்கு நாள் தோறும் கிராம மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் நிலையில் சாலையின் குறுக்கே நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிராம மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

இதனால் பாதிக்கப்படும்  கிராம மக்கள்  திருப்புட்குழி கிராமத்திற்கும் பாலு செட்டி சத்திரம் கிராமத்திற்கும் சென்று வருவதற்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி கோரிக்கை மனுக்களையும் அளித்து வருகின்றனர்.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுரங்கப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 

அதனால் பாதிக்கப்பட்ட திருப்புட் குழி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக திரண்டு வந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் போலீசார் மற்றும் நிர்வாக துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் தங்கள் ஆதார் கார்டையும், வாக்காளர் அட்டையையும் தரையில் வீசி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர்.

No comments

Thank you for your comments