Breaking News

மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிபவர்களை மீட்க 104 -இல் தொடர்பு கொள்ளவும் - மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வேண்டுகோள்

காஞ்சிபுரம், ஜூன் 19:

மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரிபவர்களை மீட்க விரும்பும் சமூக ஆர்வலர்கள் இலவச தொலைபேசி எண் 104 இல் தொடர்பு கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பேசினார்.



காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்றும்,மனநலம் பாதிக்கப்பட்டும் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை மீட்டு சிகிச்சையளிக்கும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் திறந்து வைக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி மீட்பு மையத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்விற்கு சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் நளினி, கண்காணிப்பாளர்(பொறுப்பு)செந்தில் குமார், நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப் பாளர் பிரபு,பேனியன் தொண்டு நிறுவன இயக்குநர் இந்துமதி,மெனடோரா தொண்டு நிறுவன இயக்குநர் ரத்தீஷ் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மையத்தை திறந்து வைத்த பின்னர் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்ததாவது,

ஆதரவற்று சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்கும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உணவு, படுக்கை,கழிப்பிட வசதி,புணர்வாழ்வு சிகிச்சைகள் ஆகிய சேவைகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படும். சாலைகளில் சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக இலவச 24 மணி நேர தொலைபேசி எண் 104 க்கு தெரிவிக்கலாம்.தகவலுக்குப் பிறகு மருத்துவக்குழு அந்த நபரை மீட்டு காவல்துறையின் வழிநடத்துதலின்படி மீட்பு மையத்துக்கு அழைத்து சென்று அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.

விழாவில் எம்எல்ஏ எழிலரசன் பேசுகையில் தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனமும் அரசும் இணைந்து இதுவரை 10 மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான சேவையை தொடங்கி இருக்கிறோம்.

காஞ்சிபுரத்தில் மெனடோரா அமைப்பும்,பேனியன் என்ற இரு தொண்டு நிறுவனங்கள் இச்சேவையில் அரசுடன் இணைந்து செயல்படவுள்ளது.தமிழகத்தில் இதுவரை 61 ஆயிரம் பேர் மீட்டு மையத்தில் சேர்த்து சிகிச்சையளித்து 822 நபர்களது குடும்பங்களை கண்டறிந்து அவர்களை குடும்பத்தினருடன் இணைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments