காதல் திருமணம் செய்த காதலரால் 9 மாத கர்ப்பிணி பெண் கொடுமைப்படுத்தப்பட்டார் – SP அலுவலகத்தில் புகார்!

 காஞ்சிபுரம், மே 18:

காஞ்சிபுரம் மாவட்டம் சித்தேரிமேடு பகுதியில் வசித்து வரும் கார்த்திகா (19), தனியார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய உறவினரான பசுபதி (22) என்பவருடன் இரண்டு ஆண்டுகளாக காதல் வளர்ந்தது. பெற்றோர் சம்மதமின்றியே இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கினர்.


திருமணத்தின் முதல் இரண்டு மாதங்கள் சமாதானமாக இருந்த நிலையில், பசுபதி தனது குணநலன்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். கார்த்திகாவிடம் சந்தேகம் கொண்டு, பேசும் முறையை குறை கூறி, செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுத்ததாகவும், தனியாக இருக்கும்போது வீட்டை பூட்டி விட்டு செல்வதாகவும் கார்த்திகா தெரிவித்தார்.

மேலும், பசுபதி மற்றும் அவரது தாய் சங்கீதா இணைந்து, கார்த்திகாவை அவரது தாய்வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு அழுத்தியதுடன், பல்வேறு கொடுமைகளுக்கும் உள்ளாகியுள்ளார். கார்த்திகா கூறுகையில், பசுபதி மது மற்றும் கஞ்சா போதை பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது அந்த பழக்கமே அடிக்கடி தாக்குதலுக்கும் வழிவகுத்ததாகவும் கூறினார்.

கார்த்திகா தற்போது 9 மாத கர்ப்பிணி. குழந்தையின் தந்தைதான் தாம் அல்ல எனக் கூறி பசுபதி அவளிடம் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தியதாகவும், கழுத்து மற்றும் கைகளை கத்தியால் கீறிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதையடுத்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றும் மருத்துவ பதிவுகள் உள்ளதாகவும் கூறினார்.

மத்திய அரசின் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகையாக வழங்கப்பட்ட ₹9,000 தொகையை பெற்றுக்கொள்ள கார்த்திகாவிடம் பசுபதி சண்டையிட்டு, ₹4,500 பெறப்பட்டதும் மீதமுள்ள தொகையையும் கேட்டு துன்புறுத்தியதாக புகார் கூறினார்.

இந்நிலையில், பசுபதி தாயார் சங்கீதா SP அலுவலகத்தில் புகார் அளித்து, பசுபதி தான் தாக்கப்பட்டவர் என கூறி, கார்த்திகா குடும்பத்தை பழிச்சுக் காட்ட முயற்சித்துள்ளார். இது தொடர்பாக, கார்த்திகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்து, நடந்ததனை விரிவாக எழுதி கொடுத்தார்.

காவல் ஆய்வாளர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, விசாரணைக்குப் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments

Thank you for your comments