அடிப்படை வசதிகள் இல்லை... ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பணியை நிறைவேற்றக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் பழமையான கட்டிடங்களில், வழக்கறிஞர்களுக்கும், வழக்கு சம்பந்தமாக வரும் பொதுமக்களுக்கும் ஏற்றவாறு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக புதியதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கத்தில் புதியதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து நவீன வசதிகளுடன்நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது.
புதியதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுமானப்பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதை தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்டும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி தமிழ் நாடு அரசை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைத்து சங்கங்களின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
நீதிமன்ற பணிகளை புறக்கணித்துவழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் கண்ணன், திருப்பதி முரளி கிருஷ்ணன் மற்றும் சிவகோபு ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டும் பணியை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் உமாசங்கரி, நரேந்திரகுமார், சிட்டிபாபு உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Post Comment
No comments
Thank you for your comments