காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.6.90 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
காஞ்சிபுரம், பிப்.25:
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் அருகில் அக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சீனிவாசன் என்பவரின் வாரிசுகள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
வாடகைதாரர்கள் தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
வாடகை பாக்கியாக ரூ.12,87,276 இருந்து வந்தது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோயில் செயல் அலுவலரும், அறங்காவலர் குழுவும் சம்பந்தப்பட்ட வாடகைதார்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டு ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இணை ஆணையர் அவர்கள் உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
இச்சொத்தின் மொத்த மதிப்பு ரூ.6.90 கோடி எனவும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments